Friday 16 January 2015

தமிழ் திருமறை தந்த ...திவ்ய தெய்வப் புலவர்






தமிழ் திருமறை தந்த ...திவ்ய தெய்வப் புலவர்
********************************************************************

ஈராயிரம் ஆண்டு முன் தோன்றி
ஈரடி குறள் தந்து

தேவனாய் மனிதன் செழிக்க
தெய்வமொழி தந்த தாடிமுனியே

உத்தரவேதம் என்ற
தத்துவம் தான் உன் வழியோ

உயிர்..உடல்...மனம் என்ற மூன்றெழுத்து வழி...மனிதனை
மூன்று பால் என மறை பிரித்தாய்..இயல் எனும் பகுதிகளில்

முப்பெரும் பிரிவுகளில் பிரிவுக்கு 30 அதிகாரம் மிக
தன்னதிகாரமாய் மொழிவளமையாண்டு
அதிகாரத்திற்கு பத்துகுறளென..தேமா புளிமா கொண்டு
அசை சீர் வெண்பா தமிழ் கொடுத்தாய்

ஈரடி வேதத்தில்...இறந்த..நிகழ்...எதிர் என
மூன்று காலமும் கொணர்ந்து கட்டமைத்து
சுருங்க சொல்லி நிறைந்த அர்த்தம் பொதித்தாய்

தாய்ப்பாலின் முதல் பாலில்
முப்பத்துஎட்டு அதிகாரம் வழி
பத்து குறள் தொட்டு..பாயிரம் தொடங்கி..ஊழியல் வரை
கடவுளென சொல்லாது இறை விரும்பும்
அறஞ்சொல்லும் ஒழுக்க மேன்மை முடித்தாய்

இரண்டாம் பாலில்
எழுபது அதிகாரம் தொட்டு..ஏழு இயலாய்
எழுநூறு குறள்வழி...குடிவாழ் மன்னன் ஓழுக்க ஆட்சி சிறப்புகளையும்.....அதன் வழி வாழ் மக்கள் மாண்பு நிலைகளையும் சீர் பட சிறப்பு விரும்ப எழுத்துரைத்தாய்

சிறுகடுகு பெரும் காரமாய்..உன்னிடம்
கொற்றக்குடை மன்னன் வாழ்வு ஈரடியே....
குடிசை வாழ்...மக்கள் வாழ்வும் ஈரடியே

மூன்றாம் பாலில்
மனம் எனும் ஆறாம் அறிவுவோடு நித்தம் போராடி
நிலையின்றி தவிக்கும் மனித நுட்ப உணர்வுகளை
காதலெனும் ..காமமெனும் கனிவுகளை
ஆணாகி .....பெண்ணாகி...ஊனாகிய உடல் வழி
களவியல்..கற்பியல் எனும் இயலாதிக்கமாய்
அங்குசமிட்ட இருநூற்று ஐம்பது குறள் தந்தாய்

தீண்ட தீண்ட...திகட்டாமல் தித்தித்து....
தீஞ்சுவை வாழ்வுதரும் தேம்மதுர உணர்வியலை
ஆண் பெண் எனும் அங்கவியல் சூத்திர தீக்காட்டை
அக்னிக்குஞ்சாய் எடுத்து ஒளித்து
படிக்க படிக்க உள்சென்று எரியும் பொருளில்...திருஒழுக்கமெனும் இயலாய் ஆண்டீரே பெருமகனே...

அய்யா அய்யா என்றே உமை அழுது தொழ வைக்கும்
ஈரடி இலைமறைக்காயில்
கனியிதழ் வழி நீர் ஊட்டும்....தேகத் தீப்பழச் சுவை

எம் பெருமானே...எம் முதலோனே
அடிமுடி தெரியா திருத்தமிழ் சிவனே
ஆதி பகவன் மகனே

தமிழ் எனும் தாய் பெயர் சொல்லாது
தமிழன்னை மடி தவழந்த திரு மகனே

தனிப்பெரும் இலக்கியமாய்..மதம் கடந்து மனித்ம் ஆளும் வேதமே ...அதிக மொழிகளில் பெயர்ப்பு தந்து சிறப்பு எய்திய
தனி மனித காப்பியமே

உனக்கு உரை எழுதி ஊன் உருகி தவித்தவர் பலர்
குறளோவியம் தந்து குமரிக்கடல் சிலை அமைத்து
தன் கனவு வென்றார்..எம் தலைமுறை
தமிழ் அடையாள கலைஞர்

அணிசீர் எளி மொழியெடுத்து கவிப்பூ தொடுத்து
திரு மாலை கட்டுகிறார் ...சொல்லின் செல்வர்
எம் ஆசான்.. இரா. குமார்

உம்மை உம் நாளில் ...உருகித் தவித்து
நீள் மொழியெடுத்து சரணடைந்து
வரம் வேண்டுகிறது சடாமுனியே...எம் மொழி

நான் மண்ணிருக்கும் காலம் வரை உம் குறள்வெண்பா
திருவடியில் சிறுபுள்ளி யென நான் உறைய
ஊனோடு எனைப் புதுபிக்கும்
வரம் தாருமய்யா தமிழ் முனியே

பணிகிறேன் திருமறை புலவரே...
நின் மொழி மணி அடிகளில்



No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..