அன்றைய நாளின் விடியல்
மழை சூடியிருந்தது
இமை திறக்கவிடாமல்
நாசிகோதியது மண்வாசம்
எழமுடியாதபடி இறுக்கமான
அணைப்புக்குள் கனந்திருந்தேன்
அசைவு கண்டு
இடைவிடாத முத்தங்களால்
நெகிழும்
இடைவெளி நிரப்பிக் கொண்டிருந்தாய்
துவள துவள நழுவும் விரல்பற்றி
வெகுதூரம் நடத்தி சென்றிருந்தாய்
பிரியத்தின் விளிம்பு நுனியில் நின்று
விழி பருகி கொண்டிருந்தோம்
சுண்டுவிரல் இடறினால் சுவடின்றி
தொலையும் அபாயத்திலும்
வெகுநாட்களுக்கு பின்
அடைசல்பிரியங்களுள் சிக்கிய மனம்
அடம்பிடித்தது..... வெகுநேரம்
கனவுப்பாதையிலிருந்து
இயல்பு திரும்ப