Thursday 18 December 2014

தாய்மையின் கருப்பை சத்தியம்


மிருக வெறியின் .......மீளா வேதனை

என்ன வேண்டும் இவர்களுக்கு....ஏனிந்த ரத்தவெறி
குருதி ருசிப்பில் இத்தனை பேரின்பமா....

மனக் கருணையின்றி மனைவியை கொல்பவன் கூட
குழந்தை சாக துடிப்பானே....

எப்படி இப்படியோர் பிறவிகளை....மனிதன் என்று
இன்னும் விழுங்காமல் விட்டு வைத்திருக்கிறது...
பூமி

தாயில் பிறந்தானா...பேயில் பிறந்தானா
அவனியில் இன்னும் அரக்கர்கள் வாழ்கிறார்கள்
என்பதற்கு...இவர்களே உதாரணமோ

உன் கொள்கை..உன் வெறி...உன் செயல்
உன் பிடிவாதமாய்..வந்த முடவாதத்திற்கு பலி
அப்பாவி பிஞ்சுகளா

செய்தி கேள்விப்படும் தாய்மைகளுக்கே
உயிருக்குள் கத்தி பாய்ச்சி
ஓசையில்லாமல்..கலங்கி கத்துகிறதே கருப்பை
பறிகொடுத்தவள் எப்படி கதறியிருப்பாள்..??

பயமறியா பிஞ்சுகளை....சிறு சொல் கொண்டு நெம்பினாலே
வதங்கும் குருத்துகளை ..கொல்லவா
ஆயுதம் ஏந்தி வந்தீர்கள் அற்பர்களே....
இந்த பேடித்தனமா உன் திமிர் வீரம்

வகுப்பு வகுப்பாய் சென்று...
குண்டிபாய்ச்சி குருதி ருசித்த கூட்டமே
எவர்கவனம் திருப்ப...எந்த வெற்றி நாட்ட
கண்ணை குத்தி கெக்கலிக்கிறீர்கள்....

ஆண்மையிழந்த ஆளுமை தீவிரவாதமே

ஒழுக்கம் போதித்து ஒருநிலைப்படுத்தி
கோட்பாடு வகுத்து கொள்கை பிறப்பிக்கும்
மதமெல்லாம்...மனிதம் மேம்படவே....
உன் மதமும்..என் மதமும் அதைத்தானே சொல்கிறது

கனிவும் அன்பும் கருணையின் வழியென வகுத்த
மேன்மக்கள் தான்....அதை தவறும் மிருகங்களுக்கு

உங்கள் மதத்திலேயே..மதம் பிடிப்பவர்களுக்கு
இரக்கமில்லாமல்..........வெட்டிச் சாய்க்க
கண்ணுக்கு ...கண்...பல்லுக்கு பல் என
தண்டணைகளையும் கடுமையாய்..நிர்ணயித்துள்ளனர்

கூர்தீட்டிய கத்தி பதம் பார்த்திருக்கிறது
என் பிஞ்சுகளை என்பது தான் இங்கு கண்ணீர் உதிர வேதனை

ஆண்டவன் இல்லையென்பது இது போன்ற செயலால்
உறுதியானாலும்...அவனிச்சுழற்ச்சி கட்டாயம் இருக்கிறது

அலைகடலாய்..எரிமலைக்குழம்பாய்..பெரும் மழையாய்
நில நடுக்கமாய்......மனிதனை விழுங்கி ஏப்பம் விட்டுத்தான்
கொண்டிருக்கிறது இன்னும் இயற்கை

பத்து மாதம் சுமந்து..பார்த்து பார்த்து பொத்தி வளர்த்து
விழி கசிய...உயிர் விடும் தாய்மை....
இன்று படுகுழியிலிட்டு..பதறிக் கதறுகிறதே.....

விலங்கினப் பிறவியே...நீ உயிரினமாய் பிறக்கும்
எப் பிறவியிலும்...உனக்கு எப்போதும் மன்னிப்பு இல்லை

அத் தாய்மையின் ஒரு பிடி சாபம்......உன்னை..மண்ணில்
பிறக்கவைத்து...வலிக்க சித்ரவதை செய்தே....
அழுகி வாழவைத்து....சாம்பலாக்கும் என்பது

எங்கள் தாய்மையின் கருப்பை சத்தியம்


No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..