Thursday 18 December 2014

மழலை நேசங்கள் -3



ஐந்து நிமிடம்
பார்த்துக்கொள்ளும் படி
குழந்தையை
கையில் கொடுத்து விட்டு
நீ வெளியே போகும் போது
தான் தெரிகிறது........


தாய்மையாய்....
உனக்கு எத்தனை
கரங்கள் என்று.


வாய் பேசா மழலைகளின்
வாய் மொழியிலிருந்து
உணரப்படுகிறது

'உயிர்' மெய் 
எழுத்துக்களின்
உணர்வுகளின் உயிர்ப்பு
இனிமையாய்...


அடிவயிறு எரிந்து
லேசாக கண்கள் மயங்கி
யோசிக்க முடியாமல்
உடலின் மொத்த எடையும்
தலைக்குள் வந்து
பசிக்கும் போதெல்லாம்.....
:
:
ஒரு நொடி..........
தாயை நினைத்த
பின் தான்
உணவை தேடுகிறது
மனசு...


நடக்க ஆரம்பித்ததும்
எல்லா ஏணிகளிலும்
குழந்தையாய்.......
ஏறி ஏறி முயற்சிக்கிறது
வளரும் வாழ்க்கை


ப னிக்குடத்துக்குள்
குதித்து உருளும்
ஈர நினைவுகளை
வெளி வந்த பின்னும்
மறப்பதில்லை.......
தண்ணிரை கண்டதும்
தாவி ஓடும்
வர மறுக்கும் குழந்தைகள்



எப்போதும்
இரு குழந்தைகளையும்..
சீராக சமண் தூக்கி
ஒரே நேர்கோட்டில்தான்
பார்க்கும் தாய்மை.....


உனை முத்தமிட்டு
முத்தமிட்டு
குறைத்துக் கொள்கிறேன்
என் தனிமையை..........
:
:
வளர்ந்து கொள்கிறேன்....நானும்
கொஞ்சம் தாய்மையாய்....


உன்னைப் பார்க்கும்
போதெல்லாம்...
உன்னிடமிருக்கும்
குழந்தைதனத்தை
பறித்து பசியாறிக்கொள்ள
ஆசைப்படுகிறது....என்
குரங்கு மனசு..


பிஞ்சு கைகளினாலும்
கால்களினாலும்...
உதைத்து உதைத்து
முரடுகளையும்
முசுடுகளையும்....
உருமாற்றி...ஒரு தந்தையை
பிரசவிக்கிறது குழந்தை


அறியா வயதில்
தாயின் தாலாட்டு
தூக்கங்களை விட
புரியா வயதில்
புதிர் விளக்கி
தலை கோதி
படம் பார்த்து
கதை சொல்லி
நீ உறங்கவைத்த
இரவுகள் தான் அதிகமாய்
நினைவிலிருக்கிறது அண்ணா

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..