Thursday 18 December 2014

நேசத்தின் காதல் துளிகள்-28


மயில் தோகை
இமைகள் விரித்து
இதமாய்
வருடிச் செல்கிறாயடி
இதயத்தை
பார்வைகளால்..


என்னில் 'கரு'வாய்
எனை சுமக்கும்
காதல் நீ



மேகங்களெனும்
பஞ்சுப் பொதி
பராசூட்டில்
பறந்து பறந்து
தேடுகிறேன்........

சிறு புள்ளியாய் ஆவது
தென்படுகிறாதா..??

என் உணர்வுகளை
விதவையாக்கி
சென்ற காதல்....!!

நம்மை கடந்து செல்லும்
ஒவ்வரு மனிதரிடமும்
குவியலாய் கலந்துள்ளது
நாம் பெற்றுக்கொள்ளவேண்டிய
அனுபவங்களாய்...
ஆறு வகை சுவைகளும்.....
:
[இனிப்பு,,கார்ப்பு,,கசப்பு,
புளிப்பு,,உவர்ப்பு,,துவப்பு]



உன் எண்ணங்களை
படம் பிடித்து
என் செயல்களாக
வரைகிறது......
நம் ஓவியக் காதல்..



அடிக்கடி தலைவலி
தருகிறது...என்னை நான்
மோசமாய் தோற்றுப்போன
முதல் காதல்....
:
:
நினைவுகளால்
என் வாழ்நாளை
கொஞ்சம் கொஞ்சமாய்
கொல்லும் அமிர்தமடி
என்றும் என்னில் நீ




இருள் சூழ்ந்த
என் உலகத்தில்
அரிக்கேன் வெளிச்சமாய்
நம்பிக்கை கொடுக்கிறது
உன் முக ஜொலிப்பு


என் கனவுகளில்
உன்னை சுமந்த
பாரசீக ஒட்டகமாய்
மெதுவாய்..மெதுவாய் நகர்ந்து
இரவுகளை நீளமாக்கி
செல்கிறது காதல்....


எத்தனை கூட்டத்தின்
நடுவே நான் இருந்தாலும்
''என்னை அள்ளி கொண்டு
கொஞ்சு'' என்று குழந்தையாய்
கண்களை மூடிக் கொண்டு
கை விரித்து அடம்பிடிக்கிறது.......
உன் காதல் நினைவுகள்.


அன்பு ..பாசம் எனும்
உன் ஆளுமை வால் பிடித்து....
முரட்டு கோபங்கள் களைந்து
முழுமையாய் தொடர்கிறேன்
என் பயணங்களை
உன் பாதையில்.....


நாம் போடும் சண்டைகளில்
நம்மிடம் அதிகமாய்
அடி வாங்குவது
நம் காதலும்
கைபேசியும் தான்


லட்சங்கள் கொட்டி வாங்கிய
கார் சவாரியை விட
சுகமாய் உள்ளது.எனை..
கம்பியில் அமர வைத்து
கழுத்து வளைவில்
நீ முகம் பதித்து
காதலுடன் கால் அழுத்தி
அழைத்துச் செல்லும்
சைக்கிள் சவாரி..


உன் விரல்களை
தடவும் போதெல்லாம்
வெட்கம் கொண்டு
சிவக்கிறது என்
மருதாணிக் காதல்


என்னை....
முளைகட்டி
கைநிறைய அள்ளி
உன்னில்
விதைக்கிறேன்....
காதலாய்...


உன் பட்டாம்பூச்சி
இமைகளை
என் விரல்களில் ...
படபடக்க செய்து...
குழந்தையாய்.சிரித்து
களவாடிக்கொள்கிறாய்
என் முத்தக்காதலை.

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..