Sunday 21 June 2015

தந்தையர் தின வாழ்த்துக்கள்

தேனிமை பிரியங்களுடன்
தேவதையென கொஞ்சி
தேடலில்லா வாழ்வு தரும்

தியாக பிரமமே
அறிவின் ஆசானே

கருவோடு தாய்சுமந்து இறக்கிவிட
கனிவோடு நீர்தானே கடைசிவரை
தோள்கருப்பை சுமக்கிறீர்

என்னில் இல்லா நம்பிக்கையை
என் மீது ஊன்றி ..உம் வியர்வை நீரூற்றி
எனை வளர்த்து காய்த்து
கொழிக்கவைக்கும்

ஆணிவேர் நீர்

பிறந்தஎன்னை தூக்கத்தெரியாமல்
ஒருவிரல் கொடுத்தாய்..முதலாய்
அன்று என் நம்பிக்கை நீயென
இறுகப் பற்றினேன்
இன்றுவரை உன் கைபிடித்தே நகர்கிறது
என் இமைவிடியல்கள்

என் தேவை என் தேடல்
என் இன்பம் என் நிம்மதி

சுயநலபிள்ளை நான் யோசிக்கும் முன்
உன்னைவருத்தி
எல்லாம் கொண்டுவந்து முன்நிறுத்தி
என் முக சந்தோஷத்தில் உம் மனம் மலர்வாய்

துவளும் போதெல்லாம்
சகிப்புதன்மையும் விட்டுக்கொடுத்தலும்
அவமான மீட்டெழலும்..கொடுத்து
தோள்தாங்கும் வலிமையாய்
சொற்கொண்டு என்னை தட்டிஎழுப்புவாய்

விரல்பிடித்து கூட்டி அலைந்து
பருவம்வர பாசம்தள்ளி ரசித்து
பாதுகாப்பு வளையமாய் உடன் சூழ்ந்து

தாரைவார்க்க தன்னையறியாமல்
கண்வழிய நின்று
தாயாக ...தலைதடவி பூரித்து

கட்டியவன் அதிகாரம் காட்ட
எதிர்த்து நின்று எனக்காக குரலுயர்த்தி
போரிட்டு ..அடக்கி

எந்தச்சூழலிலும்...சுழல்
என் வாழ்க்கைதீண்ட விடாத
தடுப்பணை நீர்

போராட்டகுணமும்..நின்று சாதிக்கும் வெற்றியும்
தோல்வியில்லா வாழ்வும்
தொலையாத கல்வியும்

எனக்களித்த என் பிரம்மனே
என் முதல் நண்பனே

தாயுமானவனாய் எனைத்தாங்கும்
நிறை பெருமை தோளே

என்னதவம் இங்கு நான் செய்தேன்
உம்மின் கருவாய் நான் உயிர்நிறைய

நித்தம்உம்பாதம் தொழுதாலும்
நிமிடந்தோறும் உமை வணங்கினாலும்

நான் பட்ட கடன்நன்றி இங்கு தீருமோ

இன்னொரு பிறவி எனக்கிருந்தால்
எம் மகனாய்..வந்து நீர் ..என் மடி நிறை

கருப்பையேந்தி தவமிருக்கிறேன்
கடவுளினும் மூத்தோனே

பேராண்மையாய் பெண்மை முகிழ்த்தி..

மகனாகி ..அண்ணன் தம்பியாகி
கணவனாகி பாசமெடுக்கும்
உழைப்பெனும் உதிரப் பிறவி

பூரணமாகும் தந்தை அவதாரமெடுத்த

என் பெருமைநிமிர் ஆண்மகனெனும்
ஆன்மத் திமிர் தோழமைகள்

அனைவருக்கும்
இனிய தந்தையர் தின வாழ்த்துக்கள்
 —

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..