Friday, 20 February 2015

குழைவுப் பெண்மை

என்ன சொல்ல
என்னைச் சொல்ல
என்னைத்தான் சொல்லப் போகிறேன்

என நீ எண்ணியிருந்தும்
என் எண்ணம் தெரிந்திருந்தும்

விடாத பார்வை
தொடாமல் பார்த்து

உன்னில் நான் மயங்கிய அழகுகேட்டு
போதையேற்றி கிறங்கிய பின்னே

விழி அகற்றுகிறாயே தலைவா

வார்த்தைகள் தந்தியடிக்க

தளும்பும் வெட்கம் தாங்குமோ
நெகிழ்ந்த குழைவுப் பெண்மை




பிறைநுதல் பேரழகு

வருவாய் எனக்
வழி காத்திருந்தேன்

விழி மூடி
புருவம் காட்டினாய்

களவோடு கட்டியணக்கும்
பசிக்கு போதாதெனினும்

கனவோடு களிப்புறும்
கற்பனைருசிக்கு போதுமடி

பெளர்ணமியே

உன் பிறைநுதல் பேரழகு

முத்தம் சமைக்கும் இதழ்


முத்தம் சமைக்கும்
இதழ்களும்

விருந்துண்ண அழைக்கும்
விழிகளும்

என்னை நொடியில்
கொல்லும்

அவளின்
மதுச் சயனைடு குப்பிகள்

Tuesday, 17 February 2015

ஆத்ம சுடர் வேதமே

ஆழ் பிரிய நாதமே
ஆத்ம சுடர் வேதமே

பவித்ரமான பரமமே
இமை நீவும் இனிமையே

செல்லும் பாதையெங்கும்
உடன் வந்து உயிர் காக்கும் உன்னதமே...

உன் திவ்யதிருமலரடிகளில்...
பல வண்ண காகித மலர்களை
பாதுகாப்பு வேண்டி சமர்பிக்கிறேன்

அணைத்துக் காப்பாய் அன்னைதிருஉருவே

ஓம் மாத்ரேய நமஹ...ஸ்ரீ அரவிந்தாய நமஹ...!!!!

மவுனமடிக்குள்

கனத்த மெளனத்தால்
களவாடப்பட்டிருந்தவளை

வார்த்தை புசிக்க
அழைத்தேன்

பார்வையால் மறுத்து
பழையபடி
தொலைந்து போனாள்

தன் சிறகு தானொடித்து
கூடு சுருங்கும்....
அவள் காயஅம்பு
நானாயிருப்பேனோ
மறுகி

நானும் தொலைக்கிறேன்
என்னை
அவள் மவுனமடிக்குள்

திமிர்ச்சொல் அடித்தது
நானெனினும்

தலைகோதி
தன்னுள் இழுத்துக் கொள்கிறாள்

தாய்மையாகவே பிறந்த
பொன் மகள்

வெட்கப் பட்டழகே

நீ விதையிட்ட
சாரல் பிரியங்களில்

செடியில்லாமல்
பூ மலரருமடி

வெட்கப் பட்டழகே

தேசிய திருமகன்

தெருவோடு தொடங்கி
தெருவோடு உறங்கி
தெருவோடே முடியும்
நாடோடி வாழ்வில்

தன் தலைமுறைக்கும்
பரந்த பூமியையே
உரிமை சொந்தமாக்கி
செல்கிறான்

ரேஷன் கார்டு இல்லாத
தேசிய திருமகன்