Showing posts with label இயற்கை. Show all posts
Showing posts with label இயற்கை. Show all posts

Tuesday, 11 October 2016

வண்ணங்கள் வளர்ந்த பின்



ஆதி கூட்டுப் பொழுதிலிருந்து
அதனை அறிந்தவள் அவள்

வண்ணங்கள் வளர்ந்த பின்
புழுவென அவள் சொன்னாலும்
நம்பும் கண்கள் ஏதுமில்லை

Saturday, 3 October 2015

உதிர ஆறு

செங்காட்டு பூமியில்
மழை நாளில்

வீதியெங்கும் ஓடும்
உதிர ஆறு

விவசாயி ஆவி

ஏர் கூர் முனையில்
உறி தொங்குது

மழையை நம்பி
மண்ணை பதம் பார்த்து

சாவியா போன
விவசாயி ஆவி

Tuesday, 29 September 2015

மாக் கள் அறிவதில்லை

மரம் வெட்டும்
மாக் கள்
அறிவதில்லை

மழையை
வேரறுக்கிறோமென

Sunday, 30 August 2015

மண் அரக்க வாரிசு

புலன்களை...
புகையென படிந்து
கொல்லும்

வளர் அறிவியலின்

மாசு என்னும்
மண் அரக்க வாரிசு

Sunday, 23 August 2015

புண்ணிய ஆத்மா

பூத்தலும்
புதைதலும்

பூமியின்
வாழ்வியற்கை

ஒவ்வொருமுறையும்
நிரூபித்துக் கொண்டுள்ளது
காலம்

சில
புண்ணிய ஆத்மாக்களை
உள் வாங்கி

Sunday, 2 August 2015

இறை கைப்பிள்ளை

எப்பிறவி வினையோ
இப்பிறவி கழிவோ

மா என்றழைக்கும் முன்
குழறிய மொழியில்
உள்ளிழுத்த நாக்கு வழி
உமிழ் வடிந்தது

பார்த்தவிழி பார்த்தபடி இருக்க
அழைத்தாலும் திரும்பவில்லை

எடுத்ததெற்கெல்லாம் சிரித்து
எந்தை வேதனைகூட்ட

எவரிட்ட சாபமோ
இருளிட்ட பய அதிர்வோ

மூளைநரம்பு பிறழ்வென
குறைமாதவளர்ச்சி சொல்லி
மருத்துவமும் கைவிரிக்க

வேண்டாத தெய்வமில்லை
போகாத கோவில்லை

வேதனைசொல்லி அழதிரணியற்று
ஊனமாய் ஊமைமனம்
உறைந்து பொசுங்க

பத்துமாத சுமையை
ஆயுசெங்கும் இடுப்பில் தாங்கி

கருகொடுத்தவன் ஓடினாலும்
உடன்பிறப்பெல்லாம் உதறினாலும்
கடைசிவரை வழியும் வாய்துடைத்து
உணவூட்டி....

இயற்கை கழிவகற்றி
இறைவனளித்த பரிசு என
மன உரம் கொண்ட போதும்

மன்னவன் நீயடா...
சிங்காரித்து கொஞ்சும் தெய்வத்தாயை

சிரிப்பொழுக கத்தி அடிக்கிறது

இன்னதென்று
தன்பிறவி புரியாத
இறை கைப்பிள்ளை

ஆனந்த வரமே

அதிகாலை

துயில்வதும்

எழுவதும்

ஆனந்த வரமே

Thursday, 11 June 2015

ஆன்ம பாலை

குத்திக் கிழிக்கும்
கூர்முள் பார்வையிலும்

நீர்மையானவள் நீ

மதுகுமித்த உன்
தேன்கள்ளி கனிச்சுவையில்

மரணமில்லா ஆயுள்கண்டு
வளம் கொழிக்கிறதடி

என்
ஆன்ம பாலை

கள் (ல் ) முத்தம்

கமல இலை
தண்ணீராகவே

ஒட்டியும்
ஒட்டாமல்

இதழோடுகிறது

கடமையாய்
நீ தந்த

கள் (ல் ) முத்தம்

Sunday, 3 May 2015



வெயில் நில பனை கிழத்தி


தொட்டால் குழைந்து
தொட தொட நெகிழ்ந்து

எட்டா உயரம் பிறந்து
எட்டும் அனல் தணித்து

கிழங்கும் பழமுமாய்
கள்ளாடும் போதையூறி

வேர் முதல் நுனி வரை
வேறில்லா
பாசம் கிளைத்தவள்

என் வெயில் நில
பனை கிழத்தி !!!

Tuesday, 28 April 2015

ஆணிவேர் இயற்கை

அன்பணைத்த மனைவி
ஆசை தொட்ட கணவன்
விரல் பிடித்த பிள்ளை

ஒட்டு மொத்த குடும்பமாய்
எவருமில்லை

வாய்விட்டு அழக் கூட திரணியற்று
உதிரியாய் கிடக்கிறது உறவுகள்

கட்டி கட்டியாய் சேர்த்த தங்கம்
கட்டுப் பணம்.........கட்டிக்காத்த வீடு
வாங்கி குமித்த வசதி பொருட்கள்
வான் உயர்ந்த கலையழகு

எல்லாம் நொடி குழைந்து
புழுதி சூழ கீழ் விழுந்தது
சில ஹெக்டர் நில நடுக்கத்தில்

உயிரா..பிணமா..என்றே
உள்புதைந்து கிடக்கிறது
தோண்ட தோண்ட சாம்பல் மண்ணில்

சிலதுளி கண்ணீரும்
பெரும் வருத்த மவுன அழுத்தமும்
மாற்றி தரப் போவதில்லை
இழப்பீடு உயிர்களை

எல்லாம் போலி என்றே நாம் உணரும் நிமிடம்
நம்மவர்களை ..இழக்கும் நாள்

பணசெல்வாக்கில்..பதவிஅலட்டல்களில்
அறிவியல் ஆழ்வளர்ச்சிகளில்
விண் தொட்ட சாதனைகளில்

நின்று வாழ்வதாய்...மார்தட்டும் மனிதனே

உன்னை என்றும்
வென்றே வாழ்ந்துகொண்டிருக்கிறது

இங்கு...ஆணிவேர் இயற்கை

Friday, 24 April 2015


மழை பொய்த்த மண்ணில்

குளம் நிரம்பிய நீர்
குளு குளு தென்றல்

இருபக்க பசுமையுடன்
ஒற்றையடி பாதை

ஈரமான மக்கள்

எல்லாம்
கிராம அடையாளத்தின்
ஒரு தலைமுறை கனவாகி போயின

மழை பொய்த்த மண்ணில்

Wednesday, 8 April 2015

மழைப் பூ


இரவில்
இதழ் மலர்ந்த

மழைப் பூ

இழுத்து வருகிறது
தனக்குள்

வானவில்
வண்ணங்களை