Tuesday, 5 June 2018

பேரன்பின் சாரம்



அம்மா உறங்குகிறாள்
அஞ்சப் பெத்து
அரும்பாடு பட்டு வளர்த்து
பஞ்சா நொஞ்ச உடம்பு 
கட்டையா மரக்க கண்மூடியே கிடக்கிறாள்
எப்ப பேசினாலும் முத வார்த்தையா கேட்பா
சாப்பிட்டையா யா
பக்கத்துல உட்கார்ந்து பாதம் பிடிச்சு விடனும்
கைலயும் கால்லயும்
முத்திப்போன நகத்த
வெட்டி விட்டு உடுத்துமாத்து சேலையை
அலசி உதறிப்போடனும்
அருஞ்சுவை சாதம் பிசைஞ்சு ஊட்டிவிடனும்
கனாவா தான் கண்டது 
பேத மனசு 
வர்றேன்யா உம்முட வூட்டுக்கு சொன்னவ 
வாராமலே தூங்கி போயிட்டா
உயில்எழுதி வைச்சிருக்காளாம் உழைச்சதெல்லாம் எனக்கேனு
ஆயுசுக்கும் கடங்காரனா ஆக்கிட்டு போறயே ஆத்தா னு கத்தி அழக்கூட தெம்பில்ல 
ஆம்பள அழக்கூடாதுல
அம்மா தான சொல்லிருக்கா

Sunday, 14 May 2017

கருணையின் கதவுகள்




தட்டுங்கள் திறக்கப்படும் 
என்றனர்
தட்ட தட்ட
திறக்கப்பட்டது 
திறந்த வழியெங்கும் 
கருணை பரவி கிடந்தது 
செல்ல செல்ல நம்பிக்கை துளிரும் விட்டது
பரமபத கால விளையாட்டில்.........
முடிவடைந்த பாதையின் வாயிலில்
பழைய சாத்தான் நின்று 
கெக்கரித்துக் கொண்டிருந்தான் 
கை தந்த தேவனோ 
கழுமரத்தில்
கருணையின் எல்லா வழிகளும் 
எப்போதும் முடிவடைவதில்லை
சொர்க்கத்தில்


Saturday, 18 March 2017

அடைசல்பிரியம்



அன்றைய நாளின் விடியல்
மழை சூடியிருந்தது
இமை திறக்கவிடாமல்
நாசிகோதியது மண்வாசம்
எழமுடியாதபடி இறுக்கமான 
அணைப்புக்குள் கனந்திருந்தேன்
அசைவு கண்டு 
இடைவிடாத முத்தங்களால் 
நெகிழும் 
இடைவெளி நிரப்பிக் கொண்டிருந்தாய்
துவள துவள நழுவும் விரல்பற்றி
வெகுதூரம் நடத்தி சென்றிருந்தாய்
பிரியத்தின் விளிம்பு நுனியில் நின்று 
விழி பருகி கொண்டிருந்தோம்
சுண்டுவிரல் இடறினால் சுவடின்றி
தொலையும் அபாயத்திலும்

வெகுநாட்களுக்கு பின் 
அடைசல்பிரியங்களுள் சிக்கிய மனம்
அடம்பிடித்தது..... வெகுநேரம்

கனவுப்பாதையிலிருந்து
இயல்பு திரும்ப






எவரையும் எதிர்பாராமல்
ஓடிக்கொண்டிருந்தது நிமிடம்.
யார் பேச்சையும் கேட்காமல் 
இலையசைத்துக் கொண்டிருந்தது 
காற்று 
நடுவான் நகர்ந்து அந்தி நோக்கி
பயணித்திருந்தான் பகலவன்....
பசி மறந்து 
கடல்நோக்கி காத்திருந்தன
கன்னியப்பன் வளர்புறாக்கள்
தூரத்து வெடியோசை
பட்டாசாய் கேட்டது
வேகமாக ஓடி வந்த பேரலையில்
ஒப்பாரி நுரை கசிந்திருந்தது

சேதியறியாத கன்னியம்மா
கை தவறி
நிலங் கவிழ்ந்தது
நெத்திக் குங்குமம்

Monday, 17 October 2016

தோள் கொடு






தோள் கொடு

விடியல் 
தொடாமல் 
தொடரட்டும் 

மழை

வெளிச்சம் சுற்றி 
இறகடித்து கவிழ்ந்தன
ஈசல்கள்

குளிர் தென்றல் 
அனுப்பி
கால தாமதம் செய்கிறது
நட்சத்திரங்கள் தூங்க வைத்து வரும்

சிற்றின்ப ஈசலாய்

அஸ்திவாரமின்றி
கோபுரம் கட்டியேறும்
பொய்மை
:
:
:
தலைகுப்பற தானழிவோம்
ஒரு நாளனெத்தெரிந்தும்

#சிற்றின்ப ஈசலாய்




பாச நதி


உற்று உன் முகம் பார்க்க 
ஒரு போதும் 
ஆவல்பட்டதில்லை
அருகமர்ந்து பேசி சிரிக்க
ஆயத்தபட்டதுமில்லை
மாதம் ஓரிரு முறை வரும்
அலைபேசியோ
வாரந்தவறாது வரும்
தனித் தகவலோ
தாளா பாச நதியென
வனப் பெருக்கெடுக்க
சுவடழித்து சென்ற காலச்சூறாவளியில்
கழன்று சுழல கற்றுக்கொண்டோம் 
ஏகோர் அருகிருந்தும்
எவருமில்லாதவராய்

இன்றும் என்றும்
ஆங்கோர் அமைதியில்
நினைநரம்பு சுண்டிவிட.....
தினம் பலகுரல் மோதும் 
செவிப்பறையுள் 
ஆயுளிருக்கும்

இயல்பேச்சிடையே நீ
இழுக்கும் 
#கேலி ராகம்

அன்னையே சரணம்

ஆதி சக்தியின் ஆளுமை நம்பிக்கையே 
அற்புதங்கள் நிகழ்த்தும் அன்னையே சரணம் சரணம்




தேக மா காலம்

பிடி கஞ்சியும் 
கடி மிளகாயும்
எரி உள்ளியும்

தேனென இனித்து
உரமானது
#தேக மா காலம்




மனம் தவிக்கும்

உடன் நீ
இல்லாநிலையில்
எழுதிட துணியும்
மனம் தவிக்கும்
அனைத்தையும்
பேசிட முடிவதில்லை 

வாழ்த்து


எளிமை மனமாய்

இனிமை குணமாய்
வளமை பிரியமாய்

அன்புத் தங்கை சுந்தரியின் Sundari Manalan
ஆருயிர் நேசமாய்

ஆனந்த மகிழேந்தும்
அன்புத் தம்பிக்கு ValliManalan Kadayanallur
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்

அக்கா என அன்புக் கரமிணைத்து
உயிராடியவள்
உரிமையுடன் அறிமுகம் செய்ய
அன்றிலிருந்து இன்று வரை
இயல்புதாங்கிய சிரிப்புடன்
உயர்வெழும்பிய குணங்களுடன்
பிரியமாடும் தாங்கள் 
மண்ணுலகில் என் தங்கைக்கு கிடைத்த வரம்
சந்தித்த நாளில்
தினம் பிரியம் பரிமாறும் நாங்கள்
பற்றிய விரல் விடாமல் பேசிக் கொண்டிருக்க
அதே அன்புடன் உடன்பிறப்பாய்
நீங்களும் கதிரும் பேசி அளவாடியது
என்றும் ஆச்சரியமே

வளர்ந்தும் குழந்தையாக
தன்னை தான் பேணாது
தியாக அன்பிம்சை தரும்
எங்கள் சுந்தரி தங்களுக்கு முதல் மழலையே
அவளுக்கு நீங்கள் வர வாழ்வின்பமே

இன்றணைக்கும் இன்பமும் நிம்மதியும்
என்றுமணைத்து
அன்பு குலச்செல்வன் ஆகாஷ் உடனும்
ஆதர்ச மனைவி சுந்தரியுடனும்
இன்பப் பெருவாழ்வு வாழ

இனிய வாழ்த்துகள் தம்பி

வானவில் பிரியம்

உனக்கான காத்திருப்பின் 
கோபத்தில்
கவனித்து பார்

அடியோரம் ஒட்டியிருக்கும்
#முத்தமழை கிளறும்
வானவில் பிரியம்

அமைதியே சரணம்

சரணாகதி பிரியங்கள் தரும்
சத்திய ஜீவனுறை நித்திய அமைதியே
சரணம் சரணம் !

ஆதி ரிஷிமூலம்

நதியோடி நிகண்ட நிலத்தில் 
இறகு விரித்த வலசை ஒன்று 
இறக்குமதி செய்த கழிவில்
பழமுத்திய பெருவிதை கழன்று 
மண்நுழைந்து போராடி
வேர் கிளைத்து விருட்சமாக

இலைபரப்பிய
மணங்கண்டு மனதிசைந்த
மகிழ்சோடிகள் இயைபு கண்டு
இனம்பெருக்க...
வெடித்திட்ட வேர்முண்டுகள்
வெயில் உண்டு வெப்ப ஏப்பமிட்ட
பெருமூச்சை ....
ஏந்தித் தாங்கிய முகிலது
கருமையடைந்து கற்பு தவற
வான்கூட்டிய பஞ்சாயத்தில்
பகல்திருடன் தப்பிக்க 
மூலை தேடி அழ நகர்ந்த முகில்
கூர்தீட்டிய முகட்டு மலை குத்தி
தீராக் கண்ணீர் வடிக்க

குழைதல் ப்ரியம் கண்டது
உருண்டு திரண்ட அண்ட விண்கல் 

ஏழ்பிறப்பிற்கும்
என் வாழ்தல்இடம் நீயென
நிர்ணயிக்கிறது
#ஆதி ரிஷிமூலம்

மனசுக்கு ஏதுடா வயசு


கீழே விழுந்திடாதே
மெல்ல நட
ஏனிந்த வேலையுனக்கு.
சும்மாயிரு
சொன்னத கேட்காம
எதையும் இழுத்து வைச்சுகாத
எரிச்சலோடு 
குறைபடும் சொந்தங்களை 

அடேய் மேதாவி கிறுக்குகளா....
மனசுக்கு ஏதுடா வயசு....
தெம்பிருக்கும் வரை
கிடை அடைஞ்சது சாகுமா

சுருங்கும் விழி பார்வையில்
சூட்சமாம சொல்லி நகர்றா
சூதான அப்பத்தா
இதயம் இரண்டு 
பூக்கள் ஐந்து 
இருப்பினும் 
பரிமாறப்படவில்லை

அறி விண்கலமொன்று அவனியிறங்கிய நாள்

அக்னி சிறகு விரித்து 
அறி விண்கலமொன்று
அவனியிறங்கிய நாள் 

எளிமை சுடரே
எழுச்சி வழியே 
தன்னம்பிக்கை நாட்காட்டியே
தன்னலமற்ற தவப்புதல்வனே
அன்பாலும் அரவணைப்பாலும்
உலக உயிர் புதுப்பித்து
புதுவழி காட்டும் நம்பிக்கை ஆசானே

நீ வாழ்ந்த காலத்தில் 
வாழ்ந்தோம் நாங்களென்பது
வாழ்நாள் பெருமை எங்களுக்கு

வாழ்தல் தேடும் உயிர்களுக்கு
இருப்பிட உயர்விடமாய்
நீர்நிலைக் கோளமாய்
என்றும் நீர் 
ஈரம் கோர்த்து 
வியப்பித்திருக்கிறாய்
விண்வெளியுல்...

செங்கனிவே சரணம்

செந்தணலே செழுமை வழியே 
செங்கனிவே சரணம் சரணம்




மழலைக் குறும்பு

அடிக்க
மனம் வருவதில்லை
குறும்புகள் செய்து
அலும்பு பண்ணும்

#மழலையை